செய்திகள்
மந்திரி சுதாகர்

பள்ளிகளை திறப்பது குறித்து எடியூரப்பாவுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்: மந்திரி சுதாகர்

Published On 2020-12-23 02:54 GMT   |   Update On 2020-12-23 02:54 GMT
வருகிற 1-ந் தேதி பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு :

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அதனால் கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி பள்ளிகளை திறப்பது குறித்து கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் அறிக்கையை கேட்டுள்ளோம். அந்த அறிக்கை வந்த பிறகு முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இன்று (நேற்று) மாலைக்குள் ஆலோசனை அறிக்கை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்கவில்லை. ஆனால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். மத்திய சுகாதாரத்துறை செயலாளருடன் நான் பேசினேன். அவர் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கினார். ஏற்கனவே சில மாநிலங்களில் இந்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து கர்நாடகத்திற்கு வந்தவர்களில் 138 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவில்லை. அவர்களை நாங்கள் கண்டுபிடித்து தனிமைபடுத்தி உள்ளோம். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதன் முடிவுகள் இன்று (நேற்று) மாலைக்குள் வரும். இதில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அது எந்த வகை மரபணுவை சேர்ந்தது என்பது குறித்து கண்டுபிடிக்கப்படும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News