செய்திகள்
தனியார் பள்ளிகளின் பிடியில் கர்நாடக அரசு சிக்கி உள்ளது: சித்தராமையா குற்றச்சாட்டு
தனியார் பள்ளிகளின் பிடியில் கர்நாடக அரசு இருக்கிறது. பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் உடனே இந்த பிரச்சினையில் தலையிட்டு அதற்கு தீர்வு விரைவாக காண வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தனியார் பள்ளிகள் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக கற்பித்தலை மேற்கொண்டு வருகிறது. ஆனால் முழு கட்டணத்தை செலுத்தும்படி பெற்றோரை அந்த பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்துகின்றன. கட்டணத்தை செலுத்தாவிட்டால் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள பள்ளி நிர்வாகங்கள் தடுக்கின்றன.
இந்த விஷயத்தில் மாநில அரசு மவுனம் காக்கிறது. சில பள்ளிகள் கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றன. இது பெற்றோருக்கு கூடுதல் சுமையாக இருக்கிறது. தனியார் பள்ளிகளின் பிடியில் கர்நாடக அரசு இருக்கிறது. பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் உடனே இந்த பிரச்சினையில் தலையிட்டு அதற்கு தீர்வு விரைவாக காண வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூடுதலாக கல்வி கட்டணத்தை வசூலிப்பதை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஒரு குழந்தையின் தாயார் கூறுகையில், “கொரோனா நெருக்கடி காரணமாக எனது கணவர் வேலையை இழந்துவிட்டார். அதனால் எனது குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அதனால் எனது குழந்தையை ஆன்லைன் தேர்வு எழுத தனியார் பள்ளி தடை விதித்துவிட்டது” என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
இவ்வாறு சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார்.