செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிரா அரசு ‘ஈகோ’ மனப்பான்மையை கைவிட வேண்டும்: தேவேந்திர பட்னாவிஸ்

Published On 2020-12-17 02:27 GMT   |   Update On 2020-12-17 02:27 GMT
மெட்ரோ ரெயில் பணிமனை விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு “ஈகோ” மனப்பான்மையை கைவிட வேண்டும் என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மும்பை :

மும்பை கஞ்சூர்மார்க்கில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் திட்டத்திற்காக மும்பை புறநகர் கலெக்டர் நிலம் ஒதுக்கி கொடுத்த உத்தரவுக்கு நேற்று ஐகோர்ட்டு தடை விடுத்தது.

இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கூறியதாவது:-

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அரசு மெட்ரோ ரெயில் பணிமனையை மாற்றுவதை ஒரு “ஈகோ“ பிரச்சினையாக பார்க்கிறது. மேலும் கஞ்சூர்மார்க் பகுதிக்கு பணிமனையை மாற்றுவது பொருளாதார ரீதியாகவும் சாத்தியமற்றது.

ஆரேகாலனி நிலத்தில் மெட்ரோ பணிமனை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு கூட அனுமதி அளித்தது. அதுமட்டும் இன்றி அப்போதைய அரசு அளித்த அறிக்கையையும் ஏற்றுக்கொண்டது. கஞ்சூர்மார்க்கில் மெட்ரோ பணிமனை அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என சைனிக் கமிட்டி ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது. அப்படி இருந்தும் இந்த அரசு அங்கு தான் பணிமனையை அமைக்கவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.

இந்த திட்டம் இடமாற்றம் செய்யப்பட்டால் வருங்காலத்தில் மும்பை மக்கள் மெட்ரோ சேவையை இழக்க நேரிடும்.

எனவே ஆளும் அரசு தங்கள் “ஈகோ“வை விட்டுவிட்டு ஆரே காலனியிலேயே பணிமனையை அமைக்கவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஆரே காலனியில் சில கட்டுமானங்களை அரசு மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அப்படி இருக்கையில் முழு மெட்ரோ ரெயில் நிலையத்தையும் அங்கு ஏன் அமைக்கக்கூடாது? அதை ஏன் வலுக்கட்டாயமாக கஞ்சூர்மார்க் பகுதிக்கு மாற்றவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News