செய்திகள்
பாராளுமன்றம்

கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து?

Published On 2020-12-15 08:17 GMT   |   Update On 2020-12-15 08:49 GMT
கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்படும் என பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி காங்கிரஸ் மக்களவைத் தலைவருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்த முறை பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இருக்காது என்று அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கூறி உள்ளது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் இன்று 20-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால் தலைநகர் திணறி வருகிறது. 

சர்ச்சைக்குரிய  இந்த புதிய வேளாண்  சட்டங்கள் குறித்து விவாதிக்க குளிர் கால  கூட்டத்தொடரை  கூட்டகோரி காங்கிரஸ் மக்களவைத் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷிக்கு கடிதம் எழுதினார்.

இதற்கு  பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி  எழுதிய பதில் கடிதத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும்  கொரோனா பரவலை தவிர்ப்பதற்காக அமர்வை ரத்து செய்வதையும், ஜனவரி மாதம் பட்ஜெட் அமர்வை  நேரடியாக கூட்ட ஆதரவு தெரிவித்து  உள்ளன  என்று கூறியுள்ளார்.

மேலும் "தற்போது, ​​நாம் டிசம்பர் நடுப்பகுதியில் இருக்கிறோம், ஒரு கொரோனா  தடுப்பூசி மிக விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, நான் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை  தொடர்பு கொண்டு பேசினேன், மேலும் அவர்கள் தொற்றுநோய் பரவல் குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தை விரைவாக நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது. ஆனால் கொரோனா  தொற்றுநோய்   உருவாக்கிய முன்னோடியில்லாத சூழ்நிலைகளை மனதில் வைத்து ஜனவரி மாதம் 2021 பட்ஜெட் அமர்வு நடத்தப்படுவது பொருத்தமானது.  நேர்மையான பாராளுமன்ற உறுப்பினர்  இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

கடிதத்தின் விவரங்கள் வெளிவந்த உடனேயே, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அரசாங்கம் "உண்மையிலிருந்து விலகுகிறது" என்று டுவீட் செய்துள்ளார்.
Tags:    

Similar News