செய்திகள்
காஷ்மீரில் 6-ம் கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 51.51 சதவீத வாக்குகள் பதிவு
ஜம்மு நடைபெற்ற காஷ்மீரில் நடைபெற்ற ஆறாம் கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 51.51 சதவீத வாக்குகள் பதிவானது.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அதனுடன் சேர்த்து உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.
இதற்கிடையே, 6-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குச் சாவடிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. மதியம் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஜம்முவில் 17 தொகுதிகள், காஷ்மீர் பிராந்தியத்தில் 14 தொகுதிகள் என மொத்தம் 31 மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. 77 பஞ்சாயத்து தலைவர், 334 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.
31 மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தொகுதிகளில் 245 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் 7.48 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 2071 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலின் 6-ம் கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 51.51 சதவீத வாக்குகள் பதிவானது.