தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் 2 முறை பிரதமர் ஆக இருந்த வாய்ப்பு காங்கிரசில் இருந்த கும்பலால் பறிபோனது என பிரபுல் பட்டேல் கூறினார்.
காங்கிரசில் இருந்த கும்பலால் சரத்பவார் பிரதமர் ஆக இருந்த வாய்ப்பு 2 முறை பறிபோனது- பிரபுல் பட்டேல்
பதிவு: டிசம்பர் 13, 2020 03:42
சரத்பவார்
மும்பை:
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. முன்னதாக சரத்பவார் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரபுல் பட்டேல் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.
அதில் அவர், காங்கிரசில் இருந்த ஒரு கும்பலால் 1990-களில் சரத்பவார் 2 முறை பிரதமர் ஆக இருந்த வாய்ப்பு பறிபோனது என கூறியிருந்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், சரத்பவார் குறுகிய காலத்தில் காங்கிரசில் முக்கிய தலைவராக தனது இடத்தை வலுப்படுத்தினார். 1991 மற்றும் 1996-ல் அவர் பிரதமராக தேர்வாக இருந்தார். ஆனால் டெல்லி தா்பார் (வாரிசு) அரசியல் அதற்கு தடை போட்டது. நிச்சயமாக அது சரத்பவாருக்கு தனிப்பட்ட இழப்பு தான். ஆனால் அதைவிட கட்சிக்கும், நாட்டுக்கும் தான் பெரிய இழப்பு என தெரிவித்திருந்தார்.
இதுபற்றி நேற்று பிறந்தநாள் விழாவில் பிரபுல் பட்டேலிடம் கேட்டபோது, 2 முறை பிரதமர் ஆகும் வாய்ப்பை சரத்பவார் இழந்தார். ஆனால் தற்போது ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் அவருக்கு ஆதரவாக நின்றால், நமது நிறைவேறாத கனவு நிறைவேறும் என தெரிவித்தார்.