செய்திகள்
கேரளாவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி - முதல்மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அம்மாநில முதல்மந்திரி பினராயி விஜயன் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
இந்தியாவில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி இன்னும் சில வாரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயன்பாட்டிற்கு வர உள்ள கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு போடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒவ்வொரு மாநில அரசும் தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.
இதற்கிடையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்த உடன் அதை இலவசமாக போட பல்வேறு மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக போடுவோம் என ஏற்கனவே அறிவித்துள்ளன.
இந்நிலையில், அந்த வரிசையில் தற்போது கேரளாவும் இணைந்துள்ளது. பயன்பாட்டிற்கு வந்த உடன் கேரளாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் அரசு செலவில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அம்மாநில முதல்மந்திரி பினராயி விஜயன் இன்று அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக போடப்படும் என்ற கேரள முதல்மந்திரி பினராயி விஜயனின் அறிவிப்பிற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.