செய்திகள்
ஜே.பி.நட்டாவின் வாகன அணிவகுப்பில் கற்களை வீசி தாக்கிய கும்பல்- 2 முக்கிய தலைவர்கள் காயம்
மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகன அணிவகுப்பின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் 2 முக்கிய தலைவர்கள் காயமடைந்தனர்.
கொல்கத்தா:
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வாகனத்தில் சென்றார். அவரது வாகன அணிவகுப்பு செல்லும் பகுதியில் ஏராளமானோர் சாலையோரம் திரண்டு பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
டயமண்ட் ஹார்பர் பகுதியில் நட்டாவின் வாகனம் கடநது சென்றபோது, பாஜக தலைவர்களின் வாகனங்களை நோக்கி போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மிகப்பெரிய செங்கற்களையும் வீசினர். சாலையை மறித்து பாஜக தலைவர்களை தடுக்கவும் முயன்றனர்.
இந்த தாக்குதலில் பாஜக தலைவர்களின் வாகனங்கள் சேதமடைந்தன. ஜே.பி.நட்டாவின் கார் மீதும் கற்கள் விழுந்தன. ஆனால் அது குண்டு துளைக்காத கார் என்பதால் பாதிப்பு ஏற்படவில்லை. முகுல் ராய், கைலாஷ் விஜய்வர்கியா ஆகிய முக்கிய தலைவர்கள் காயமடைந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இந்த தாக்குதலை ஜே.பி.நட்டா கடுமையாக கண்டித்துள்ளார். இது ஜனநாயகத்திற்கே அவமானம் என்று கூறி உள்ள நட்டா, மேற்கு வங்கத்தில் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சகிப்புத்தன்மையின்மை முடிவுக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.