செய்திகள்
கோப்பு படம்

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி - உச்சநீதிமன்றம்

Published On 2020-12-08 06:10 GMT   |   Update On 2020-12-08 11:11 GMT
சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது.
டெல்லி:

ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலைத் திட்டம் அமைக்கும் திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்த திட்டத்துக்கு நில உரிமையாளர்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்புகளின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள், டாக்டர் அன்புமணி ராமதாஸ், வக்கீல் சூர்யபிரகாசம் 
உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும், 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

விவசாயிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்து இன்று தீர்ப்பு வெளியானது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியது.

தீர்ப்பில் கூறியதாவது:

* 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து
செய்யப்படுகிறது.

* சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும்.

* ஆனால், சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

* புதிய அறிவிக்கை வெளியிட்டு நிலங்களை கையகப்படுத்தலாம்

* 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

* ஏற்கனவே நடைபெற்ற நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கை செல்லாது.

* மீண்டும் நிலம் கையகப்படுத்த புதிய அரசாணையை வெளியிட வேண்டும்

* உரிய துறைகளில் அனுமதி பெற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 8 வழிச்சாலை திட்டத்தை புதிதாக தொடங்கலாம். 
 
* நெடுச்சாலை அமைப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் துறையிடம் உரிய அனுமதி பெறவேண்டும்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News