செய்திகள்
சாதி கலப்பு திருமணத்தை நாங்கள் எதிர்க்கவில்லை: மந்திரி ஈசுவரப்பா
‘லவ் ஜிகாத்’ பெயரில் பெண்கள் விற்கப்படுவதை தடுக்க வேண்டும். சாதி கலப்பு திருமணத்தை நாங்கள் எதிர்க்கவில்லை என்று கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு :
கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
‘லவ் ஜிகாத்’ அதாவது பிற மதத்தினர் நமது இந்து மத பெண்களை திருமணம் செய்து வெளிநாடுகளில் விற்பனை செய்கிறார்கள். இதனால் நமது மத பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இதை தடுக்க வேண்டியது அவசியம். இதை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை. சாதி கலப்பு திருமணத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.
தான் முதல்-மந்திரியாக இருந்தபோது வளர்ச்சி பணிகளை அதிகளவில் மேற்கொண்டதாக சித்தராமையா சொல்கிறார். ஆனால் சாமுண்டீஸ்வரி தொகுதியில் அவர் தோல்வி அடைந்தார். பசுவதை தடை சட்டத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். இதை சித்தராமையா எதிர்க்கிறார். கிராம பஞ்சாயத்து தேர்தலில் பசுவதை செய்ய நாங்கள் அனுமதிப்போம் என்று சித்தராமையா கூறட்டும் பார்க்கலாம். பசுக்களை நாங்கள் தாய்க்கு சமமாக பார்க்கிறோம்.
வயதான பசுக்களை பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வீட்டு வாசலில் போய் விட வேண்டும் என்று சித்தராமையா சொல்கிறார். இதன் மூலம் அவர் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டார். அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.