செய்திகள்
சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்

விவசாயிகள் போராட்டம் - நாடு தழுவிய முழு அடைப்புக்கு சிவசேனா ஆதரவு

Published On 2020-12-06 18:25 GMT   |   Update On 2020-12-06 18:25 GMT
விவசாயிகள் போராட்டம் 11வது நாளாக நீடிக்கும் நிலையில், நாளை மறுநாள் நடைபெற உள்ள நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு சிவசேனாவும் ஆதரவு அளித்துள்ளது.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும், டெல்லியின் எல்லைப்பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லை நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். 

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
 
இதற்கிடையே, 11-வது நாளாக போராட்டத்தை தொடரும் விவசாயிகள், தங்களுக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி உள்ளனர். போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பாக சிங்கு எல்லையில் இன்று விவசாய சங்க நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர். 

அதில் 8-ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி விவசாய சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் 11வது நாளாக நீடிக்கும் நிலையில், நாளை மறுநாள் நடைபெற உள்ள நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு சிவசேனாவும் ஆதரவு அளித்துள்ளது.

இதுதொடர்பாக, சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விவசாயிகளுக்கு ஆதரவாக 8-ம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு சிவசேனா ஆதரவு அளிக்கும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News