செய்திகள்
நடிகை ராகிணியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை ராகிணியின் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டு அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
பெங்களூரு :
பெங்களூருவில் போதைப்பொருள் வழக்கில் கன்னட திரை உலகில் பிரபல நடிகைகளான ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 18-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நடிகைகள் மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 2 நடிகைகளும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இவர்களில் நடிகை ராகிணியின் ஜாமீன் மனுவை ஏற்கனவே பெங்களூரு சிறப்பு கோர்ட்டு மற்றும் கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, நடிகை ராகிணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை ராகிணிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று, அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடினார்.
அதே நேரத்தில் ராகிணிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து ஆட்சேபனை தெரிவிக்க அரசு மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து, நடிகை ராகிணியின் ஜாமீன் மனுவை அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் ஜாமீனை எதிர்பார்த்து காத்திருந்த நடிகை ராகிணி ஏமாற்றம் அடைந்துள்ளார். புத்தாண்டையும் அவர் சிறையிலேயே கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.