செய்திகள்
வாக்கு எண்ணும் மையத்தில் திரண்டிருந்த கட்சியினர்

ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் திடீர் திருப்பம்... பாஜகவை முந்தியது டிஆர்எஸ்

Published On 2020-12-04 10:02 GMT   |   Update On 2020-12-04 10:02 GMT
ஐதராபாத் மாநகராட்சியில் பாஜக வேட்பாளர்கள் முதலில் அதிக எண்ணிக்கையில் முன்னிலை பெற்ற நிலையில், பிற்பகல் டிஆர்எஸ் கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும் (டிஆர்எஸ்), பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
 
இந்நிலையில், ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது. மொத்தம் 30 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

ஆரம்பத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கியது. இரண்டாவது இடத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி இருந்தது. 11 மணி நிலவரப்படி பாஜக 88 வார்டுகளிலும், டிஆர்எஸ் 32 வார்டுகளிலும் முன்னிலையில் இருந்தது. எஐஎம்ஐஎம் கட்சி 17 வார்டுகளில் முன்னிலை பெற்றிருந்தது. 

பிற்பகல் 2 மணி நிலவரப்படி இந்த முன்னணி நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டது. டிஆர்எஸ் கட்சி கூடுதல் இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கியது. அதேசமயம் ஊடகங்களில் மாறுபட்ட தகவல்களும் வெளியாகின. 

ஈடிவி செய்தியில் பாஜக 39 இடங்களிலும், டிஆர்எஸ் 36 இடங்களிலும் முன்னிலை பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏஐஎம்ஐஎம் கட்சி 14 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. 

அதேசமயம் என்டிவியில் வெளியான தகவலில், டிஆர்எஸ் 70 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக காட்டப்பட்டது. பாஜக 30 இடங்களிலும், ஏஐஎம்ஐஎம் கட்சி 45 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்டது.

டிவி9 வெளியிட்ட செய்தியில், டிஆர்எஸ் 57 இடங்கள், ஏஐஎம்ஐஎம் 31 இடங்கள், பாஜக 22 இடங்கள், காங்கிரஸ் 3 இடங்களில் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்டது. இவ்வாறு மாறுபட்ட தகவல் வெளியாகி வருவதால் வெற்றி நிலவரத்தை உறுதியாக கணிக்க முடியாத நிலை உள்ளது. 4 வார்டுகளில் ஏஐஎம்ஐஎம் வெற்றி பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News