செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா? : மத்திய-மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

Published On 2020-12-04 02:50 GMT   |   Update On 2020-12-04 02:50 GMT
கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள், முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா நோயாளிகளுக்கான முறையான சிகிச்சை, இறந்துபோன கொரோனா நோயாளிகளின் உடல்களை கண்ணியமாக கையாளுதல், அடக்கம் செய்தல் தொடர்பாக தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, குஜராத், மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி அரசின் சார்பில் மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் பெரும்பாலான மாநிலங்களில் கடைப்பிடிப்பதில்லை. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தும், அதற்கான பலன் கிடைக்கவில்லை. அரசியல், மதம், சமய சடங்கு உள்ளிட்டவை சார்ந்த கூட்டங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில்லை. இதுபோன்ற கூட்டங்களை ஆய்வு செய்ய ஏற்பாடுகளும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக தீர்வுகாண மாநில அரசுகளிடம் இருந்து உரிய ஆலோசனைகளை பெற்று, அதன் பின்னர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் திங்கட்கிழமைக்குள் (டிசம்பர் 7) பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும், இமாசலபிரதேசத்தில் கொரோனா நோயாளிகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், படுக்கை வசதி குறைபாடுகள் தொடர்பாக மாநில அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News