செய்திகள்
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா உள்ளது - பாஜக மந்திரி பேச்சு

Published On 2020-12-02 22:56 GMT   |   Update On 2020-12-02 22:56 GMT
டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா உள்ளது என பாஜக கட்சியை சேர்ந்த அரியானா வேளாண் மந்திரி தெரிவித்துள்ளார்.
சண்டிகர்:

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 8-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், டெல்லி-அரியானா எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 8-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

டெல்லி-உத்தரபிரதேச எல்லையான காசியாபாத் பகுதியிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய குழுக்களுடன் மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. இதனால், போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்து வருகிறது.

விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா என பாஜக மூத்த தலைவரும், அரியானா வேளாண் மந்திரியுமான ஜேபி டலால் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஜேபி டலால் கூறியதாவது:-

வேளாண் சட்டங்களால் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் நினைக்கிறார்கள் என்றால் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ஒரு வருடமோ, இரண்டு வருடமோ, மூன்று வருடமோ காத்திருக்க வேண்டும்.

இந்த சட்டங்களால் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டால் நீங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சட்டத்தில் மாற்றம் வேண்டும் என கோரிக்கை வைக்கலாம். நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம்.

மருத்துவர் மருந்து கொடுக்கும்போது, நீங்கள் அதை சாப்பிட தயாராக இல்லை. மேலும், அதை சாப்பிட்டால் இறந்துவிடுவோம் என கூறுகிறீர்கள். நீங்கள் இப்படி முடிவுகளை எடுக்கக்கூடாது.

இது விவசாயிகளை பற்றியது அல்ல. விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட எதிரிநாடுகள் இந்தியாவை நிலைகுலைய வைக்க வேண்டும் என நினைக்கின்றன.

என்றார்.
Tags:    

Similar News