செய்திகள்
உத்தரபிரதேசம்: 60 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் - மீட்பு பணிகள் தீவிரம்
உத்தரபிரதேசத்தில் 4 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். அவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தை சேர்ந்தவர் விவசாயி பஹிரத் குஷ்வாஹா. இவருக்கு இரண்டு மகள்களும், 4 வயதில் கணேந்திரா என்ற மகன் உள்ளனர்.
பஹிரத் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது கோதுமை வயலுக்கு நேற்று சென்றிருந்தார். அங்கு தனது மகனை விளையாட விட்டுவிட்டு குடும்பத்தினர் அனைவரும் கோதுமை வயலில் வேலை செய்துகொண்டிருந்தனர்.
வேலையை முடித்து விட்டு குடும்பத்தினர் அனைவரும் மதியம் 12 மணியளவில் கோதுமை வயலில் இருந்து வெளியே வந்தனர். அப்போது வயலில் விளையாடிக்கொண்டிருந்த கணேந்திராவை காணவில்லை என்பதை உணர்ந்த குடும்பத்தினர் குழந்தையை தேடினர்.
அப்போது கோதுமை வயலில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை கணேந்திரா தவறி விழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக போலீசார் மற்றும் மீட்பு குழுவினருக்கு பஹிரத் தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறனர்.
ஆழ்துளை கிணறு 60 அடி ஆழம் கொண்டது எனவும், தற்போது குழந்தை 30 அடி ஆழத்தில் உள்ளது எனவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
8 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் குழந்தை மூச்சுவிட ஏதுவாக ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிஸ்கட் மற்றும் பால் போன்ற
உணவு பொருட்களும் குழந்தைக்கு கயிறு மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது வரை குழந்தை நலமுடன் இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் புல்டோசர் வாகனங்களின் உதவியுடன் மண்ணை தோண்டி மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.