செய்திகள்
எடியூரப்பா மாற்றப்படுவதாக வெளியான தகவல் தவறானது: மந்திரி சோமண்ணா
முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றப்படுவதாக வெளியான தகவல் தவறானது. எங்கள் கட்சி மேலிடத்தில் அத்தகைய எந்த ஆலோசனையும் நடக்கவில்லை என்று வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா கூறியுள்ளார்.
கலபுரகி :
வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றப்படுவதாக வெளியான தகவல் தவறானது. எங்கள் கட்சி மேலிடத்தில் அத்தகைய எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. எம்.எல்.ஏ.க்கள் யாரும் எடியூரப்பாவை மாற்ற கோரி கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதவில்லை. எடியூரப்பா மகன் விஜயேந்திரா நிர்வாகத்தில் தலையிடுவதாக கூறுவது தவறு. நாங்கள் மூத்த தலைவர்கள். எங்கள் துறை நிர்வாகத்தில் யாரும் தலையிடவில்லை. நான் 40 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறேன்.
எடியூரப்பாவின் அனுபவம் என்ன?. அவரது ஆட்சி நிர்வாகத்தில் வேறு யாராவது தலையிட முடியுமா?. எடியூரப்பா ஆட்சியில் வளர்ச்சி பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. கிராம பஞ்சாயத்து தேர்தலில் மக்கள் பா.ஜனதாவை ஆதரிப்பார்கள். கிராமப்புற மக்களின் ஆதரவு பா.ஜனதாவுக்கு கிடைத்தே தீரும்.
இவ்வாறு சோமண்ணா கூறினார்.