செய்திகள்
விவசாயிகள் பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

Published On 2020-12-01 13:57 GMT   |   Update On 2020-12-01 13:57 GMT
மூன்று மணி நேரத்திற்கு மேலாக மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 6-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரி பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 6-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையில், டிசம்பர் 3-ம்தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அழைப்பை விவசாயிகள் ஏற்கமறுத்தையடுத்து இன்று நடத்த பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதலில் மறுத்த விவசாய குழு தலைவர்கள் பின்னர் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக அறிவித்தனர்.

மத்திய அரசு சார்பில் வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் மற்றும் வர்த்தக கைத்தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

விவசாயிகள் குழு தலைவர்கள் - மத்திய அரசு இடையே மாலை 3.30 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றும், எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் தொடரும் என விவசாயிகள் குழு அறிவித்துள்ளது.

மத்திய அரசு சார்பில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News