செய்திகள்
பிரதமர் மோடி

வாரணாசியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம்- நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

Published On 2020-11-30 10:14 GMT   |   Update On 2020-11-30 10:14 GMT
வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் போன்ற பல்வேறு பணிகள் நடந்திருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாரணாசியில் உள்ள ராஜாதலாப் பகுதியில் இருந்து பிரயாக்ராஜின் ஹண்டியா வரையிலான தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

குரு நானக் ஜெயந்தி மற்றும் தேவ் தீபாவளியை முன்னிட்டு வாரணாசி மேம்பட்ட உள்கட்டமைப்பைப் பெற்று வருகிறது. இது வாரணாசி மற்றும் பிரயாகராஜ் இரு பகுதிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த ஆண்டுகளில் காசி நகரை அழகுபடுத்துவதோடு, அதனுடன் இணைந்த பணிகளின் பலனையும் இப்போது நாம் காணலாம். 

வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க சாலைகளை அகலப்படுத்துதல் போன்ற பணிகள் நடந்துள்ளன. 

இவ்வாறு அவர் பேசினார்.

மாலையில் வாரணாசி கங்கை நதிக்கரையில் தீபங்களை ஏற்றிவைக்கும் பிரதமர் மோடி, அங்கு நடைபறும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். தொடர்ந்து கங்கை நதியில் படகுப் பயணம் மேற்கொள்கிறார். காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபடுகிறார். 

பிரதமர் மோடியுடன் தேவ் தீபாவளி பண்டிகையில் உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேலும், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் பங்கேற்கிறார்கள். அதன்பின்னர் இரவு 9 மணிக்கு மோடி டெல்லி திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News