செய்திகள்
மெகபூபா முப்தி

சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் வரை காஷ்மீர் பிரச்சனை தீராது - சொல்கிறார் மெகபூபா

Published On 2020-11-29 10:25 GMT   |   Update On 2020-11-29 10:25 GMT
ஜனநாயகத்திற்கு இடமில்லாத ஒரு சூழ்நிலை அமைப்பை உருவாக்க பாஜக விரும்புகிறது என மெகபூபா முப்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 234 பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி நேற்று நடைபெற்றது.

மொத்தம் உள்ள 280 தொகுதிகளில் நேற்று முதல்கட்டமாக காஷ்மீரில் 25 மற்றும் ஜம்முவில் 18 என மொத்தம் 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 296 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி கவுன்சில் முதல்கட்ட தேர்தலில் 51.76 சதவிகித வாக்குகள் பதிவுகள் பதிவானது. இந்த தேர்தலில் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லாவின் அரசியல் கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி இணைந்து அமைத்துள்ள குப்கர் பிரகடன அமைப்பும் போட்டியிட்டது.

இந்நிலையில், காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் நாங்கள் போட்டியிட முடிவெடுத்த பின்னர் ஜம்மு காஷ்மீரில் அடக்குமுறை அதிகரித்துள்ளது. எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் வாக்குசேகரிக்க அனுமதிக்கப்படவில்லை. வாக்குசேகரிக்க அனுமதிக்கப்படாமல் எப்படி வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவது.

ரோஷ்னி திட்டம் தான். ஆனால் அது ஊழலாக மாறியுள்ளது.

அவர்கள் (பாஜக) முஸ்லீம்களை பாகிஸ்தானியர்கள் என்றும், சர்தார்களை காலிஸ்தானியர்கள் என்றும், சமுக செயல்பாட்டாளர்களை நகர்புற நக்சலைட்டுகள் என்றும், மாணவர்களை சமூக விரோதிகள் என்று கூறுகின்றனர்.

அனைவரும் பயங்கரவாதிகள் மற்றும் தேசவிரோதிகள் என்றால் அப்போது இந்த நாட்டில் யார்தான் இந்தியர் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பாஜக கட்சியினர் மட்டும்தானா?

காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படாதவரை பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 மீண்டும் கொண்டுவராதவரை காஷ்மீருக்கான பிரச்சனை தீர்க்கப்படாது.

மந்திரிகள் வருவார்கள் போவார்கள்... தேர்தல்களை நடத்துவது பிரச்சனைக்கு தீர்வாகாது.

ஜனநாயகத்திற்கு இடமில்லாத ஒரு சூழ்நிலை அமைப்பை உருவாக்க பாஜக விரும்புகிறது. நான் எனது குரலை உயர்த்துவதால் அவர்கள் (பாஜக) என்னை பிடிக்க முயற்சிக்கின்றனர். எனது கட்சியை தடை செய்ய விரும்புகின்றனர். 

எனது விடுதலைக்கு பின்னர் தான் சிறப்பு சட்டம் 370 குறித்த பேச்சுகள் நடைபெறுகிறது என நான் தொடர்ந்து கூறிவருகிறேன். ஆனால், அதற்கு
நான் என்ன செய்வது.

என்றார்.   
Tags:    

Similar News