செய்திகள்
சபரிமலை கோவில்

சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து நாளை இறுதி முடிவு

Published On 2020-11-29 05:24 GMT   |   Update On 2020-11-29 05:24 GMT
சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு கூறினார்.
சபரிமலை:

திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக தினமும் ஆயிரம் பக்தர்களே முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்கள். நடை திறந்தது முதல் 27-ந் தேதி வரை (அதாவது நேற்று முன்தினம்) 13,529 பக்தர்களே தரிசனம் செய்து உள்ளனர். நிலக்கல்லில் இதுவரை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 37 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் சன்னிதானத்தில் சிறப்பு பணியில் இருந்த 9 பேருக்கும் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து யாரும் அச்சம் கொள்ள தேவை இல்லை.

கடந்த ஆண்டுகளில் மண்டல, மகர விளக்கு சீசன் காலக்கட்டத்தில் நடைதிறந்த நாளில் இருந்து இதுவரை உள்ள நாட்களில் ரூ.45 முதல் ரூ.50 கோடி வரை வருமானம் கிடைக்கும். இந்த ஆண்டு இதுவரை ரூ.2 கோடி கூட வருமானம் வரவில்லை.

சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பதே தேவஸ்தானத்தின் விருப்பம். இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தலைமை செயலாளர் தலைமையிலான நிபுணர் குழுவும், கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது.

இந்த நிலையில் சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக அரசு சார்பில் நாளை (திங்கட்கிழமை) இறுதி முடிவு எடுக்கப்படும். அதனை தொடர்ந்து ஆன்லைன் முன்பதிவு மீண்டும் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News