செய்திகள்
மேற்கு வங்காளத்தை மேற்கு பங்களாதேஷாக மாற்ற சதி நடக்கிறது - பாஜக தலைவர் பேச்சு
மேற்கு வங்காளத்தை மேற்கு பங்களாதேஷாக மாற்ற சதி நடப்பதாக மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபை தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளபோதும் அரசியல் கட்சியினர் தற்போது முதலே பிரசார கூட்டங்களை நடத்தத்தொடங்கியுள்ளனர்.
அந்த சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த தேர்தலில் முக்கிய கட்சியாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்த முறை மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜகவும், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசும் தற்போதில் இருந்தே தேர்தல் தொடர்பான பிரசார நிகழ்ச்சிகளில் ஈடுபடத்தொடங்கிவிட்டன.
இதற்கிடையில், தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்துமோதல் அரங்கேறி வருகிறது. குறிப்பாக மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் இன்று பேசியதாவது:-
டெல்லியில் இருந்து எங்கள் தலைவர்கள்(பாஜக) வரும்போது மம்தா பானர்ஜி பயப்படுகிறார். குஜராத்தில் இருந்து பாபு வரும்போது வரவேற்கிறீர்கள். ஆனால், அதே குஜராத்தில் இருந்து மோடி மற்றும் அமித்ஷா வரும்போது பயப்படுவது ஏன்?
மேற்கு வங்காளத்தை மேற்கு பங்களாதேஷாக மாற்ற சதி நடக்கிறது. பயங்கரவாத குழுக்கள் இங்கு செயல்படுகின்றன. மேற்கு வங்காளத்தை முன்னேற்ற நாங்கள் விரும்புகிறோம்.
என்றார்.