செய்திகள்
மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்: டி.கே.சிவக்குமார்
கர்நாடகத்தில் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கொப்பலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். நெல்லுக்கு கூடுதலாக ரூ.500 வழங்க வேண்டும். முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளுக்கு ஆட்சியை பாதுகாத்து கொள்வது தான் முக்கியம். விவசாயிகளை காப்பாற்றுவது அவர்களுக்கு முக்கியம் அல்ல. மேலும் விவசாயிகளை இந்த அரசு வாழ விடவில்லை.
வருகிற 30-ந் தேதி எங்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளேன். கல்வித்துறை குறித்து இந்த அரசு எங்களுடன் ஆலோசிக்கவில்லை. பள்ளிகளை திறப்பது குறித்து ஒரு முறை எங்களுடன் முதல்-மந்திரி ஆலோசித்தார். பள்ளிகளை திறப்பது குறித்து அரசே முடிவு செய்யட்டும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நான் மின்சாரத்துறை மந்திரியாக பணியாற்றினேன். நாடே போற்றும் அளவுக்கு மின்சாரத்துறையில் நான் பணியாற்றினேன். எனது பணியை மத்திய அரசும் பாராட்டியது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.