செய்திகள்
திரிபுராவில் அகதிகள் மறுவாழ்வுக்கு எதிரான போராட்டம் நீடிப்பு
திரிபுராவில் புரு அகதிகளின் மறுவாழ்வு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு திரிபுரா மாவட்டத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது.
அகர்தலா:
மிசோரம் மாநிலத்திலிருந்து திரிபுராவிற்கு இடம்பெயர்ந்த சுமார் 35 ஆயிரம் புரு பழங்குடியின மக்களுக்கு திரிபுராவில் நிரந்தரமாக தங்குவதற்குவதற்கான மறுவாழ்வு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து புரு அகதிகளுக்கான மறுவாழ்வுக்கான பணிகள் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், புது அகதிகளுக்கான மறுவாழ்வு நடவடிக்கையை கண்டித்து வடக்கு திரிபுரா மாவட்டத்தில் பன்சிநகர், கஞ்சன்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. கஞ்சன்பூரில் நேற்றும் போராட்டக்காரர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி சாலையில் பேரணியாக சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் பன்சிநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார், 34 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.