செய்திகள்
டெல்லியில் முதல் முறையாக ரேபிட் டெஸ்ட் எண்ணிக்கையை முந்திய பிசிஆர் டெஸ்ட்
டெல்லியில் வீடுவீடாக நடத்தப்பட்ட சோதனையில் வெள்ளிக்கிழமை வரை 3,70,729 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் கொரோனா வைரசின் மூன்றாம் அலையின் பரவி வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 7,000 புதிய தொற்று உறுதி செய்யப்படுகிறது. நேற்று 6608 புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 5.17 லட்சமாக உயர்ந்துள்ளது. 4.68 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 118 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,159 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், நோயாளிகளை உடனடியாக அடையாளம் கண்டு மருத்துவமனையில் சேர்க்கவும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நோய் பரவல் அதிகம் உள்ள இடங்களில் வீடு வீடாக பரிசோதனை செய்யப்படுகிறது. ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பபடுகின்றன.
இந்நிலையில், டெல்லியில் முதல்முறையாக ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் எண்ணிக்கையை விட ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வீடுவீடாக நடத்தப்பட்ட சோதனையில் வெள்ளிக்கிழமை வரை 3,70,729 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
250 வென்டிலேட்டர்கள் டிஆர்டிஓ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனையில் கூடுதலாக 207 ஜூனியர் டாக்டர்களை பணியமர்த்தும் பணி தொடங்கியிருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது.