கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் குஜராத், மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானும் சில நகரங்களில் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
கொரோனா பாதிப்பு எதிரொலி - ராஜஸ்தானில் சில நகரங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்
பதிவு: நவம்பர் 22, 2020 03:33
இரவுநேர ஊரடங்கு
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று 3,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலத்திற்கு பிறகு ராஜஸ்தானில் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது.
இதனால் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர், ஜோத்பூர், பைக்னர், உதய்பூர், ஆஜ்மீர், அல்வார், பில்வாரா ஆகிய நகரங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் நகரங்களில் அத்தியாவசிய சேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் நடமாட தடை விதிக்கப்படும் என்று மாநில முதல் மந்திரி அசோக் கெலாட் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், முக கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை ரூ. 200-ல் இருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களும் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் தற்காலிகமாக சில இடங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
Related Tags :