செய்திகள்
18 நாட்களில் 174 மாணவர்கள், 107 ஆசிரியர்களுக்கு கொரோனா - மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடல்
அரியானாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் வரும் 30-ம் தேதி வரை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சண்டிகர்:
கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகளை மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் உள்ள பள்ளிகளை திறந்தன.
அரியானா மாநிலத்திலும் கடந்த 2-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டுமே நடந்த அனுமதிக்கப்பட்டுள்ளது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்ட போதும் மாணவர்கள், ஆசிரியர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதுவரை, அரியானாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 174 மாணவர்களுக்கும், 107 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருவதால் அரியானாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் வரும் 30-ம் தேதி வரை (நவம்பர் 30) மூட உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பள்ளிகள் மூடப்படுவதாகவும், பள்ளிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்படும் எனவும் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பல மாதங்களுக்கு பிறகு கடந்த 2-ம் தேதி திறக்கப்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்ட போது மாணவர்களுக்கு கொரோனா பரவத்தொடங்கியதால் அரியானாவில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளது.