செய்திகள்
எடியூரப்பா

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக கர்நாடகத்தை மாற்ற முயற்சி: எடியூரப்பா

Published On 2020-11-20 02:35 GMT   |   Update On 2020-11-20 02:35 GMT
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக கர்நாடகத்தை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :

பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு-2020 பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு பேசியதாவது:-

சுயசார்பு இந்தியா திட்டத்தை வெற்றி அடைய செய்யுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். உள்நாட்டில் தொழில்நுட்பங்களை தயாரிப்பது, அடிமட்டத்தில் புதுமைகளை புகுத்துவது, கண்டுபிடிப்பது உள்ளிட்டவற்றை ஊக்குவிப்பதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை அமல்படுத்த அதன் மூலம் இந்த சுயசார்பு திட்டத்தை வெற்றி பெற வைக்க கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா பிரதமர், சுவிட்சர்லாந்து துணை அதிபர் மற்றும் 25 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டுள்ளனர். அவர்களை நான் வரவேற்கிறேன்.

வேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலக அளவில் 6-வது மிகப்பெரிய பொருளாதார பலத்தை கொண்ட நாடு இந்தியா என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நாட்டில் தற்போது டிஜிட்டல் மயம் வேகமாக நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் தயாரிப்போம், டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் முன்பை விட தற்போது அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

வருகிற 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் (சுமார் 375 லட்சம் கோடி) பொருளாதார பலம் கொண்ட நாடாக உருவாக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். மத்திய அரசின் இந்த இலக்கை அடைய அனைவரும் இந்த முயற்சியில் பங்கெடுக்க வேண்டும். தொழில் முதலீடுகளை குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக கர்நாடகத்தை மாற்ற அனைத்து ரீதியிலான முயற்சியும் அரசு எடுத்து வருகிறது.

புதிதாக தொழில் தொடங்குவதில் கர்நாடகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தொழில் முதலீடுகளுக்கு ஏற்ற சூழ்நிலையை கர்நாடகத்தில் உருவாக்கி வருகிறோம். இந்த நோக்கத்தில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்வது, கர்நாடக டிஜிட்டல் பொருளாதார அமைப்பு, கர்நாடக புதுமையை உருவாக்கும் ஆணையம் அமைத்தல் போன்ற முக்கியமான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. புதிய தொழில்நுட்ப கொள்கையை அறிவித்துள்ளோம்.

இதில் பெங்களூருவை தவிர்த்து மாநிலத்தின் பிற நகரங்களில் தொழில்நுட்ப நிறுவனங்களை தொடங்க முக்கியத்துவம் அளித்துள்ளோம். இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். உயிரிதொழில்நுட்ப துறையில் கர்நாடகம் தேசிய அளவில் முன்னணியில் உள்ளது. நாட்டின் மொத்த உயிரி தொழில்நுட்ப பொருளாதாரத்தை வருகிற 2025-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக (7.50 லட்சம் கோடி) உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் 50 சதவீதம் கர்நாடகத்தின் பங்கு இருப்பதை உறுதி செய்ய கர்நாடகம் தீவிர முயற்சி செய்யும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
Tags:    

Similar News