செய்திகள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளை இந்திய ராணுவம் அதிரடியாக தாக்கி அழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவம் மீதும், பொதுமக்கள் மீதும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், பாகிஸ்தான் ராணுவம் ஆதரவுடன் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களை தடுத்து சதி வேலைகளை முறியடிக்கும் பணிகளை இந்திய பாதுகாப்புப்படை செய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதும், தாக்குதல் நடத்துவதும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் காஷ்மீரைச் சேர்ந்து மூன்று பொதுமக்களும், 3 ராணுவ வீரர்களும் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரை இழந்தனர்.
இன்று காலை ஆப்பிள் லாரியில் மறைந்து தப்ப முயன்ற நான்கு பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படை சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிலைகள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் சிறுவகை ராக்கெட்டை ஏவுவதற்காக அமைத்திருந்த லாஞ்ச்பேடுகள் (launchpads) அழிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.