செய்திகள்
லூதியானாவில் போராட்டம் நடத்திய விவசாயிகள்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்வரை ஓயமாட்டோம் -டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்

Published On 2020-11-19 04:16 GMT   |   Update On 2020-11-19 04:16 GMT
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் நடைபெறும் பேரணியில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் செல்ல உள்ளனர்.
லூதியானா:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பஞ்சாப் மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. நேற்று லூதியானாவில் விவசாய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டம் குறித்து பாரதிய கிசான் யூனியன் மாவட்ட தலைவர் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்காக 27ம் தேதி ஏராளமானோர் டெல்லி செல்ல உள்ளோம். விவசாயிகளுக்கு எதிரான கருப்பு சட்டங்களை ரத்து செய்தால்தான் நாங்கள் ஒய்வெடுப்போம், அதுவரை ஓயமாட்டோம்’ என்றார்.

மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் மற்றும் வர்த்தக துறை மந்திரி சோம் பிரகாஷ் ஆகியோரை விவசாய சங்கங்களின் தலைவர்கள் சமீபத்தில் டெல்லியில் சந்தித்து பேசினர். இதில், விவசாயிகளுக்கு சாதகமான எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து, டெல்லியில் மிகப்பெரிய அளவில் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். 

வரும் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் பேரணி நடத்துவதற்கு பாரதிய கிசான் யூனியன், அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டர்களில் செல்ல திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News