செய்திகள்
பசுக்களை பாதுகாக்க தனி அமைச்சகம்... மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு
மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்படும் தனி அமைச்சகத்தின் முதல் கூட்டம் 22ம் தேதி நடைபெற உள்ளது.
போபால்:
இந்துக்களால் புனிதமாக கருதப்படும் பசுக்களை பாதுகாக்கவும், பசுக்கள் அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கவும் பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.
உணவுக்காக பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும், பசுக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது அரசின் கடமை என சாதுக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பசுக்களின் பாதுகாப்பிற்காக தனி அமைச்சகத்தை உருவாக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இந்த அமைச்சகத்தில், கால்நடை வளர்ப்பு, வனம், பஞ்சாயத்து, ஊரக வளர்ச்சி, வீட்டு மற்றும் உழவர் நலத் துறைகள் ஒரு அங்கமாக இருக்கும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், கோபாஷ்டமியான வரும் 22ம் தேதி, அகர் மால்வா மாவட்டம் சலரியாவில் உள்ள பசுக்கள் சரணாலயத்தில், பசு அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறும் என்றும் சவுகான் கூறினார்.