செய்திகள்
கோப்புப்படம்

உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு முயற்சியில் 2 தலித் சகோதரிகள் கொலை

Published On 2020-11-18 01:18 GMT   |   Update On 2020-11-18 01:18 GMT
உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு முயற்சியில் தலித் சகோதரிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பதேபூர்:

உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ள குளத்தில் 2 சிறுமிகள் பிணமாக மிதந்தனர். அவர்கள் 8 வயது மற்றும் 12 வயதான தலித் சிறுமிகள் என்றும், இருவரும் சகோதரிகள் என்றும் தெரியவந்தது.

சம்பவத்தன்று பகலில் தோட்டத்திற்கு காய்கறிகள் பறித்து வருவதாக சென்ற அந்த சிறுமிகள் வீடு திரும்பவில்லை. அருகில் உள்ள குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட அவர்களின் உடலில் கண்களிலும், வேறு சில இடங்களிலும் காயங்கள் இருந்தன.

“அவர்களை யாரோ சிலர் கற்பழிக்க முயன்று உள்ளனர். தங்கள் முயற்சி பலிக்காத காரணத்தால் அவர்கள் சிறுமிகளை கொன்றிருக்கலாம்” என்று உதவி போலீஸ் சூப்பிரண்டு கூறினார். சிறுமிகளின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்கள் பரிசோதனை அறிக்கைக்கு பின்னர்தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி தீவிர விசாரணை நடக்கிறது.
Tags:    

Similar News