செய்திகள்
பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி

காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் தேச விரோத செயலில் ஈடுபடுகின்றனர் - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

Published On 2020-11-16 10:38 GMT   |   Update On 2020-11-16 10:38 GMT
காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் தேச விரோத செயலில் ஈடுபடுவதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. 

மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் இருந்த காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகளான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி போன்றோர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலையான காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி (சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு முந்தைய நாள்) நடைபெற்ற அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட குப்கார் பிரகடனத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுளது.

குப்கார் பிரகடனம் என்பது காஷ்மீரின் சுய ஆட்சி, சிறப்பு அந்தஸ்து, தனித்தன்மையை ஒருங்கிணைந்து பாதுகாக்க காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டுக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் துணைநிற்கும் என்பதாகும்.

இதற்கிடையில், சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பரூக் அப்துல்லா அளித்த பேட்டியில் சீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும், குப்கார் பிரகடனம் தொடர்பாக காஷ்மீர் கட்சிகள் மெகபூபா முப்தி தலைமையில் அவ்வப்போது கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ரவிசங்கர் பிரசாத் 
கூறியதாவது:-

குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியினர் காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்டத்தை திரும்ப கொண்டுவருவதை தங்கள் கொள்கையாக கொண்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் தங்கள் ஊழலை தொடர வேண்டும் என்பதற்காக ஊழல் தடுப்பு சட்டம் உள்பட சில சட்டங்களை அவர்கள் விரும்பவில்லை. 

சீனாவின் உதவியுடன் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ கொண்டுவருவோம் என முன்னாள் முதல்மந்திரிக கூறுகின்றனர். இது தேச விரோத செயல். சிறப்பு சட்டம் 370 தொடர்பான தங்கள் நிலைப்பாட்டை சோனியா காந்தி, ராகுல்காந்தி உறுதிபடுத்த வேண்டும்.

என்றார்.  
Tags:    

Similar News