செய்திகள்
நிதிஷ் குமாரின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் ஆர்ஜேடி
பீகார் மக்களின் தீர்ப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இருந்ததாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. நிதிஷ் குமார் தொடர்ந்து 4-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்.
ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமாருக்கு, ஆளுநர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். நிதிஷ் குமாருடன் பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்கின்றனர். இதுதவிர 12 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்க உள்ளனர்.
பதவியேற்பு விழாவில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பதவியேற்பு விழாவிற்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. மக்களின் தீர்ப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இருந்ததாகவும், இரண்டு உதவியற்ற கட்சிகள் இன்று பீகாரில் அரசாங்கத்தை அமைப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.