செய்திகள்
பீகாரில் புதிய அரசு பதவியேற்பு எப்போது? நாளை மறுநாள் என்டிஏ எம்எல்ஏக்கள் ஆலோசனை
பீகாரில் புதிய அரசு பதவியேற்பு மற்றும் முதலமைச்சர் தேர்வு தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
பாட்னா:
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிகபட்சமாக பாஜக 74 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 தொகுதிகளில் வென்றுள்ளது.
இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைப்பதற்கான பணியை தொடங்கி உள்ளது. இதற்காக இன்று கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நிதிஷ் குமாரின் வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, சட்டமன்ற குழு தலைவரை (முதலமைச்சர்) தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதுபற்றி நிதிஷ் குமார் கூறுகையில், ‘நவம்பர் 15ம் தேதி 12.30 மணியளவில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்’ என்றார். இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
15ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் நிதிஷ் குமார் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நடைமுறைகள் தொடங்குவதற்கு முன்பே ஆளும் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக நிதிஷ் குமார் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.