செய்திகள்
தலைமைச் செயலகம்

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு

Published On 2020-11-07 07:09 GMT   |   Update On 2020-11-07 07:09 GMT
நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

நாட்டில் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு விருது பட்டியலை அறிவித்துள்ளது. இதில் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான விருதினை தமிழக அரசு பெற்றுள்ளது.

மத்திய நீர்வள அமைச்சகம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பில், நீர் மேலாண்மையில் தென் இந்தியாவில் ஆறுகளை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்ததில் சிறந்த மாவட்டமாக வேலூர், கரூர் மாவட்டங்கள் தேர்வாகியுள்ளன. அதேபோல் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட உள்ளாட்சி அமைப்புகளில் மதுரை மாநகராட்சி தேர்வாகியுள்ளது.

நீர்நிலைகளை பாதுகாப்பதில் சிறந்த மாவட்டமாக பெரம்பலூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளது.

மேலும், நீர் மேலாண்மையை கற்பித்து, மாணவ, மாணவிகளை ஊக்குவித்த பள்ளிகளுக்கான விருதுப் பட்டியலில் புதுச்சேரியின் காட்டேரிக்குப்பத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது.

நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட தென்னிந்திய சமூக செயற்பாட்டாளர்களாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் முதல் பரிசையும், அண்ணா பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் சக்திநாதன் கணபதி பாண்டியன் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News