செய்திகள்
பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு படையினர்

காபுல் பல்கலைக்கழக தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்

Published On 2020-11-03 22:12 GMT   |   Update On 2020-11-03 22:12 GMT
காபுல் பல்கலைக்கழகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கடந்த 2-ம் தேதி ஆயுதங்களுடன் சில பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். தகவலறிந்து விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் பல்கலைக்கழகத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. சில மணி நேரங்கள் இந்த துப்பாக்கிச்சண்டை நீடித்தது. 

இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகவும் அதில் ஒருவன் வெடிகுண்டுகளை உடலில் கட்டியபடி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாகவும், ஏனைய இரு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  22 பேர் பலியானதாகவும், மேலும் 22 பேர் காயம் அடைந்துள்ளதாகவும்  உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. தாக்குதலில் பலியானோரில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என்று காபுல் காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எல். என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த 2 வாரங்களில் 2வது முறையாக இந்த பல்கலைக்கழகம் தாக்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையே, காபுல் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்கானிஸ்தானின் துணிச்சலான போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்றார்.

இந்நிலையில், காபுல் பல்கலைக்கழகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காபுல் பல்கலைக்கழகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. இந்த கொடூரமான செயலில் மகன்களையும், மகள்களையும் இழந்தவர்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் நிற்கிறது என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News