செய்திகள்
காங்கிரஸ் மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறது - சொல்கிறார் உ.பி. முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்
காங்கிரசும், ராஷ்டிர ஜனதா தளமும் மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துவதாக உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார்.
பாட்னா:
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 28 நடைபெற்றது. இடண்டாம் கட்ட தேர்தல் நாளை (நவம்பர் 3) நடைபெறுகிறது. மேலும், இறுதிகட்ட தேர்தல் நவம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி அமைத்துள்ளது.
இந்த கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இதேபோல் ஆளும் என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது.
இதற்கிடையில், கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு நட்சத்திர பேச்சாளர்களும் தங்கள் கூட்டணிக்கு ஆதரவாக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தேர்தலில் பாஜக-வின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உத்தரபிரதேச முதல்மந்திரி இன்று மேற்கு சம்ரன் பகுதியில் உள்ள பல்மிகி நகரில் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசார நிகழ்ச்சியின் போது பேசிய உ.பி. முதல்மந்திரி யோகி கூறியதாவது:-
காங்கிரசாக இருந்தாலும் ராஷ்டிரிய ஜனதா தளமாக இருந்தாலும் அவர்களுக்கு மக்களை ஏமாற்றுவது மட்டுமே தெரியும். அவர்கள் ஜாதி, மதம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகின்றனர். மக்களை ஒருங்கிணைப்பதை அவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது.
என்றார்.