செய்திகள்
ஷைப்புல்லா மீர்

காஷ்மீர் என்கவுண்டர்: ஹிஸ்புல் முஜாகிதீன் தலைமை தளபதி சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

Published On 2020-11-01 12:03 GMT   |   Update On 2020-11-01 12:03 GMT
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைமை தளபதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் உள்ள ரங்ரீத் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, அப்பகுதியை இன்று மாலை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி பதில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இந்த சண்டையில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். மேலும், ஒருவன் சரணடைந்ததையடுத்து அந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டான்.

இந்த என்கவுண்டர் நிறைவடைந்ததையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காஷ்மீர் ஐஜி விஜய் குமார், இந்த என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைமை தளபதி ஷைப்புல்லா மீர் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். 

ஹிஸ்புல் முஜாகிதீன் முன்னாள் தளபதியான ரியாஸ் நைகோ கடந்த மே மாதம் என்கவுண்டரில் கொல்லப்பட்ட பின்னர் அந்த அமைப்பின் தலைமை தளபதி பொறுப்பை ஷைப்புல்லா ஏற்றுக்கொண்டுள்ளான். மேலும், கைது செய்யப்பட்ட மற்றொரு பயங்கரவாதியிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காஷ்மீர் ஐஜி தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News