செய்திகள்
உத்தவ் தாக்கரே

நவம்பர் 30 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

Published On 2020-10-30 00:23 GMT   |   Update On 2020-10-30 00:23 GMT
மகாராஷ்டிராவில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலம் தான் அதிக கொரோனா பாதிப்புகளை சந்தித்து உள்ளது. இதில் நேற்று வரை மாநிலத்தில் 16 லட்சத்து 66 ஆயிரத்து 668 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 ஆயிரத்து 710 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று மாநிலத்தில் புதிதாக 5 ஆயிரத்து 902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதற்கிடையே, மாநிலத்தில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பஸ், மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த 5-ம் தேதி முதல் மாநிலத்தில் ஓட்டல், பார்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன.

மின்சார ரெயில்களில் பொதுமக்களையும் அனுமதிக்க வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்துக்கு நேற்று முன்தினம் மாநில அரசு கடிதம் எழுதி உள்ளது. மாநில அரசின் கோரிக்கையை பரிசீலித்து வருவதாக ரெயில்வே நிர்வாகமும் பதில் அளித்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஊரடங்கை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு நேற்று அறிவித்தது.

இதில் புதிதாக எந்த தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ந் தேதி வரை தொடரும் என்று அறிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் கோவில்களை திறக்க வேண்டும் பா.ஜ.க.வினர் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி எழுதிய கடிதத்தால் அவருக்கும், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆனால் வழிபாட்டு தலங்களைத் திறப்பது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது அதை திறக்க வேண்டும் என போராடி வருபவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து உள்ளது. இதேபோல பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்களை திறப்பது தொடர்பாகவும் மாநில அரசு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
Tags:    

Similar News