செய்திகள்
புதிதாக தொடங்கப்பட்டுள்ள நூலகத்தில், கொரோனா நோயாளிகள் புத்தகம் படிக்கும் காட்சியை படத்தில் காணலாம்.

தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா நோயாளிகளுக்கு நூலக வசதி

Published On 2020-10-29 23:18 GMT   |   Update On 2020-10-29 23:18 GMT
தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா நோயாளிகளின் பொழுது போக்குக்காக, கிண்டி கிங் மருத்துவமனையில் 1,700 புத்தகங்களுடன் நூலக வசதி தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு, பாதிப்பு அதிகம் இருந்தால் அரசு மருத்துவமனைகளிலும், குறைவான பாதிப்புடையவர்களுக்கு கொரோனா மையங்களிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால், சிலர் மனநல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

இதனால் அரசு மருத்துவமனைகள், கொரோனா மையங்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை உற்சாகப்படுத்தி, அவர்களின் பொழுது போக்குக்காக பல்வேறு நடவடிக்கைகளில் மருத்துவமனை நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் தற்போது கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை நீக்கும் விதமாகவும், பொழுது போக்குக்காகவும் நூலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூலகம் மருத்துவமனையின் 2-வது தளத்தில் 500 சதுர அடி பரப்பளவு கொண்ட அறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் நேற்று திறக்கப்பட்டு நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகம் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் என ஒரு நாளைக்கு 6 மணி நேரம் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

இந்த நூலகம் 16 பேர் சமூக இடைவெளியுடன் உட்கார்ந்து படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது மருத்துவம், வரலாறு, மனநல ஆரோக்கியம், யோகா, கல்வி, கதைகள், குழந்தைகள் ஆரோக்கியம் உள்ளிட்ட, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 1,700 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கிண்டி கிங் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் நாராயணசாமி கூறியதாவது:-

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள், தனிமையில் இருப்பதால், அவர்களுக்கு மனநலம் தொடர்பான பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இதனால் அவர்களுக்கு கொரோனா சிகிச்சையோடு, யோகா உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக, கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையில், நோயாளிகளின் பொழுது போக்குக்காக நூலக வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நோயாளிகள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளோம். காலை மற்றும் மாலையில் 3 மணி நேரம் புத்தகம் படிப்பதால் அவர்களது மனநிலையும் சீராக இருக்கும். இதுவரை 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட நோயாளிகள் கொரோனா சிகிச்சை முடிந்து, பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 470 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News