செய்திகள்
காஷ்மீர்: பாஜக நிர்வாகிகள் 3 பேரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்
காஷ்மீரில் 3 பாஜக நிர்வாகிகளை பயங்கரவாதிகள் இன்று சுட்டுக்கொன்றனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குல்ஹம் மாவட்டம் ஒய்கே பூரா பகுதியை சேர்ந்த உமர் ரஷித் பேக் குல்ஹம் மாவட்ட பாஜக கட்சியின் இளைஞரணி பொதுச்செயல்ளாராக உள்ளார்.
அதேபோல் அப்பகுதியை சேர்ந்த உமர் ரம்சன் ஹஜீம் மற்றும் பிடா ஹசன் யாதூ ஆகிய இருவரும் மாவட்ட பாஜக நிர்வாகிகளாக செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், பாஜக நிர்வாகிகள் 3 பேரும் இன்று இரவு 8 மணியளவில் ஒய்கே பூரா பகுதியில் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற காரை இடைமறித்த பயங்கரவாதிகள் பாஜக நிர்வாகிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடந்த பகுதிக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த பாஜக நிர்வாகிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்தவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல் நடந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தேடும்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.