செய்திகள்
சிவசங்கர்

கேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி

Published On 2020-10-29 06:33 GMT   |   Update On 2020-10-29 06:33 GMT
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய சிவசங்கரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
எர்ணாகுளம்:

கேரள தங்க கடத்தல் தொடர்பாக முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கர் மீது அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இதனையடுத்து முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் சிவசங்கர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். ஆனால் சிவசங்கருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. அவரது மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனையடுத்து சிவசங்கரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். சுமார் 6 மணி நேரம் அவரிடம் தங்கக் கடத்தல் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், இன்று காலை சிவசங்கரை எர்ணாகுளம்  நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, சிவசங்கரிடம் தங்க கடத்தல் வழக்கில் பல்வேறு தகவல்களை பெற வேண்டியிருப்பதால், 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி அமலாக்கத்துறை தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இந்த வேண்டுகோளை பரிசீலித்த நீதிமன்றம், சிவசங்கரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதனையடுத்து சிவசங்கரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் கஸ்டடிக்கு கொண்டு சென்றனர்.

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதையடுத்து சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News