செய்திகள்
முதல்-மந்திரி பினராயி விஜயன்

நாட்டிலேயே எந்த மாநிலமும் செய்யாதது... கேரளாவில் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்

Published On 2020-10-28 07:11 GMT   |   Update On 2020-10-28 07:11 GMT
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் காய்கறிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார்.

திருவனந்தபுரம்:

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் காய்கறிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார்.

கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் 16 வகையான காய்கறிகளின் விலையை முதன் முறையாக அரசே நிர்ணயம் செய்கிறது.

நாட்டிலேயே காய்கறிகளின் விலையை அரசே நிர்ணயம் செய்யும் முதல் மாநிலம் கேரளமாகும்.

இந்த திட்டம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளின் விலையில் இருந்து 20 சதவீதத்துக்கும் அதிகமாக கணக்கீட்டு விற்பனை செய்யப்படும்.

காய்கறிகளின் விலையை அரசே நிர்ணயிக்கும். சந்தைகளில் காய்கறிகளின் விலை குறைந்தாலும் கூட அதற்கு கூடுதலான விலையில் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்யப்படும்.

விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்யவும், அவற்றை விற்பனை செய்யவும் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த திட்டமானது ஒரு பருவத்தில் 15 ஏக்கருக்கும் அதிகமாக காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு மிகுந்த பலன் அளிக்கும். இந்த திட்டத்தில் சேர விரும்பும் விவகாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் இந்த திட்டத்தின் பட்டியலில் இருக்கிறதா? என தெரிந்து கொண்டு வேளாண்மை துறை இணைய தளத்தில் வருகிற 1-ந்தேதி முதல் பதிவு செய்யலாம்.

மாநிலத்தில் விவசாயத் துறையை மேம்படுத்த ஏராளமான முயற்சிகளை கேரள அரசு எடுத்து வருகிறது. கடந்த 4½ ஆண்டுகளில் மாநிலத்தில் காய்கறிகளின் உற்பத்தி 7 லட்சம் டன்னில் இருந்து 14.72 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் இதனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News