செய்திகள்
சத்தீஸ்கர்: ஆயுதங்களை கைவிட்டு 32 நக்சலைட்டுகள் போலீசில் சரண்
சத்தீஸ்கர் மாநிலத்தில் பெண்கள் உள்பட நக்சலைட்டுகள் 32 பேர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரணடைந்தனர்.
ராய்ப்பூர்:
மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திவரும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் பொதுமக்கள், போலீசார் மீது அவ்வப்போது பயங்கர தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்த குழுவினரை வேட்டையாட மாநில சிறப்பு தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நக்சலைட்டுகள் அவரவர் செய்த குற்றங்களின் அடிப்படையில் தேடப்படும் நக்சலைட்டுகளின் தலைக்கு அரசு சார்பில் லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிக்கப்படுவதுண்டு.
போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டைகளால் பல நக்சலைட்டுகள்
உயிருக்கு அஞ்சி திருந்தி வாழும் முயற்சியாக தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் டன்டிவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகளாக செயல்பட்டுவந்த பெண்கள் உள்பட மொத்தம் 32 பேர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு நேற்று போலீசில் சரணடைந்தனர்.