செய்திகள்
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

மணிப்பூரில் கடும் நிலச்சரிவு- தேசிய நெடுஞ்சாலையில் 4வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு

Published On 2020-10-26 04:12 GMT   |   Update On 2020-10-26 04:12 GMT
மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு காரணமாக, நெடுஞ்சாலையில் நான்காவது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சேனாபதி:

மணிப்பூர் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேனாபதி மாவட்டம் காங்கெம் தானா அருகில் கடந்த 23ம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவின்போது ஒரு சரக்கு லாரி அடித்து செல்லப்பட்டது.

இந்த நிலச்சரிவால், இம்பால்-திமப்பூர் பகுதிக்கிடையிலான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சாலையை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் வானிலை தொடர்ந்து மோசமாக இருப்பதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நான்காவது நாளாக இன்றும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் இப்போதைக்கு நெடுஞ்சாலையில் போக்குவரத்து தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை. ஒரு வாரத்திற்குள் நெடுஞ்சாலையுடனான இணைப்பை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவம், இதே வானிலை தொடர்ந்தால் கூடுதல் நாட்கள் ஆகும் என்றும் திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமான மழை நீடிக்கும் என்றும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News