செய்திகள்
தினசரி கொரோனா மீட்பு எண்ணிக்கையில் 81 சதவீதம் கொண்ட 10 மாநிலங்கள்
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2வது நாளாக 7 லட்சத்திற்கும் கீழ் குறைந்திருக்கிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54,366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70.16 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 67,549 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கண்டறியப்படும் புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்து வருகின்றனர்.
தினசரி குணமடையும் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் 81 சதவீதம் 10 மாநிலங்களில் உள்ளனர். புதிதாக குணமடைவோரில் பாதிக்கு மேல் முதல் மூன்று மாநிலங்களில் (மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா) உள்ளனர். இதுதொடர்பான புள்ளிவிவர வரைபடத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதேபோல் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளவர்களில் 48 சதவீதம் இந்த 10 மாநிலங்களில் உள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,80,680 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதன்மூலம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2வது நாளாக 7 லட்சத்திற்கும் கீழ் குறைந்திருக்கிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 8.71 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.