செய்திகள்
எல்லையில் உள்ள இந்திய வீரர்கள்

இந்தியா-சீனா எல்லை பதற்றம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் -அமெரிக்கா விருப்பம்

Published On 2020-10-24 06:39 GMT   |   Update On 2020-10-24 06:39 GMT
லடாக்கில் இந்தியா-சீனா பதற்ற நிலைமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள விரும்புவதாக அமெரிக்க மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

லடாக் எல்லையில் இந்தியா-சீனா படைக்குவிப்பு மற்றும் பதற்ற நிலையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், பதற்றத்தை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள விரும்புவதாகவும் டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள்  தெரிவித்தனர். 

அடுத்த வாரம் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை மந்திரி மார்க் எஸ்பர் ஆகியோர் டெல்லி வந்து 2 + 2 பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், இந்த கருத்தை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்கிழக்கு ஆசியாவிலும், தென் சீனக் கடலிலும் இந்தியாவின் ஈடுபாட்டை அமெரிக்கா வரவேற்றதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி மார்க் எஸ்பர் ஆகியோர், இந்தியாவின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். பாதுகாப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்பு தகவல் பகிர்வு, ராணுவ வீரர்கள் இடையிலான தொடர்புகள் மற்றும் ராணுவ வர்த்தகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசப்படுகிறது.

சீனாவின் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள இந்தியா போன்ற ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் இணைந்து செயல்படுவது முக்கியம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News