செய்திகள்
ராகுல் காந்தி வயநாடு வருகை- கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பு
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, மலப்புரத்தில் நடைபெற்ற கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
மலப்புரம்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, அடிக்கடி வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது தொகுதி மக்களைச் சந்தித்து வருகிறார். கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போதும் வயநாட்டில் 4 நாட்கள் தங்கியிருந்து நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார்.
இந்நிலையில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு வயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் கோழிக்கோடு வந்து சேர்ந்தார். அவரை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ராகுல் காந்தி, மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.