செய்திகள்
இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்க்கிறேன்- நியூசி. தேர்தலில் வெற்றி பெற்ற ஜெசிந்தாவுக்கு மோடி வாழ்த்து
நியூசிலாந்து பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜெசிந்தாவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
நியூசிலாந்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் ஆளும் தொழிலாளர் கட்சி 49 சதவிகித வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி 27 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.
பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஜெசிதாவின் ஆளும் கட்சி கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டெர்ன் மகத்தான வெற்றியை பெற்று, நியூசிலாந்தின் பிரதமராக இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், நியூசிலாந்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜெசிந்தாவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் மகத்தான வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு வருடத்திற்கு முன்னர் நாம் கடைசியாக சந்தித்ததை நினைவு கூர்ந்து, இந்தியா-நியூசிலாந்து இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தி உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக, ஒன்றிணைந்து பணியாற்றுவதை எதிர்பார்க்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.